Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நாடின்றி ஏழு வருடங்கள் வாழ்ந்த ஹிட்லர்

தமிழாக்கம்: சரீமா லாஃபிர்

இருபதாம் நூற்றாண்டின் ஆட்சியாளர்களில் அடொல்ஃப் ஹிட்லர் மிகவும் பிரசித்தம்வாய்ந்தவராவார். 1933 இல் ஜேர்மன் சான்ஸலராக இருந்த அவர் அவர், 1934 இல் ஜேர்மன் ஜனாதிபதி பீல்ட் மார்ஷல் போல் பொன் ஹிண்டன்பேக் இறந்ததன் பின்னர், அந்நாட்டின் தலைவரானார். இதன் பின்னர் அவர் ஃப்யுரர் அல்லது தலைவர்என அழைக்கப்பட்டார். அவர் 1945 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஜேர்மனியை ஆட்சிசெய்தார்.

ஹிட்லர் ஜேர்மன் நாட்டின் ஆட்சியாளராக மாறியபோதும், அவர் பிறப்பால் ஒஸ்ட்ரிய நாட்டவராவார். (cdn.thedailybeast.com)

உலகின் மிக மேன்மையான இனம் ஜேர்மனிய இனம் என்று ஹிட்லர் நம்பினார். முதலாம் உலக மகா யுத்தத்தில் தோல்வியை தழுவியதில் இருந்து  பின்னடைவை எதிர்கொண்டிருந்த அரசை மீளக்கட்டியமைக்கவும், அதனை உலகின் சிரேஷ்டமான அரசாக மாற்றவும் அவர் கனவு கண்டார். அவர் ஜேர்மனியை கிழக்குத்திசையில் விரிவுபடுத்த எண்ணியிருந்தார்.

ஹிட்லர் ஜேர்மன் நாட்டின் ஆட்சியாளராக மாறியபோதும், அவர் பிறப்பால் ஒஸ்ட்ரிய நாட்டவராவார். எவ்வாறாயினும், ஹிட்லர் ஏழு வருடங்களாக நாடற்ற நிலையிலிருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு விடயமாகும். அதாவது, அவர் அக்காலகட்டத்தில் எந்தவொரு நாட்டினதும் பிரஜையாக இருக்கவில்லை. அந்த ஏழு ஆண்டுகளிலும் தேர்தல்களில் போட்டியிடவும் அவரால் முடியவில்லை. இந்தக் காலப் பகுதியில், அவர் தலைமை தாங்கிய நாசிச கட்சியானது தேர்தல்களில் பங்குகொண்டபோதும், ஹிட்லர் ஒருபோதும் அத்தேர்தல்களில் போட்டியிடவில்லை.

இராணுவ சேவையில் இணைவதை ஹிட்லர் புறக்கணித்தல்

1914 பெப்ரவரி மாதம் அவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின்படி அவருக்கு நுரையீரல் தொடர்பான நோயொன்று உள்ளதாகவும், இராணுவத்தில் மட்டுமன்றி உதவி இராணுவப்படையில் கூட அவரால் இணைய முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (thumbs.media.smithsonianmag.com)

ஹிட்லர் ஒஸ்ட்ரியா நாட்டின் “ப்ரவுநாவு” என்னும் நகரத்தில், 1889 ஏப்ரல் 20ஆம் திகதி பிறந்தார். இக்காலகட்டத்தில் ஒஸ்ட்ரியாவானது, ஒஸ்ட்ரிய – ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தின் பகுதியாக இருந்தது. இந்த ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில், இப்போதைய ஒஸ்ட்ரியா பிரதேசத்தில், ஜேர்மன் மக்களே வாழ்ந்து வந்தனர். (அதாவது, ஜேர்மன் மொழி பேசுவோர்). இந்த ஏகாதிபத்திய அரசை, ஹெல்ப்ஸ்பேர்க் அரச வம்சத்தினர் ஆட்சி செய்தனர். அவர்களும் ஜேர்மன் மொழி பேசுபவர்களாவர். எனினும் அந்நாட்டின் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் அங்கு இருந்தனர்.

ஹிட்லர், ப்ரவுநாவுவில் சிறியதொரு காலமே வாழ்ந்தார். இதன் பின்னர் அவர் லின்ஸ் நகரிலும், பின்னர், 1905ஆம் ஆண்டிலிருந்து வியானா நகரிலும் வாழ்ந்தார். 1910 இல் அவருக்கு 21 வயது பூர்த்தியானதும், கட்டாய இராணுவ சேவையில் இணைய வேண்டியிருந்தது. எனினும், அவர் இராணுவ சேவைக்கு செல்லவில்லை. அவர், பயத்தினாலேயே இராணுவ சேவைக்குச் செல்லவில்லை என சிலர் கூறினாலும், ஹிட்லர் பற்றி எழுதிய பல எழுத்தாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இக்காலகட்டத்தில் ஹிட்லருள் ஜேர்மனிய தேசியவாத எண்ணம் வளர ஆரம்பித்திருந்தது. அதனால் அவர் ஒஸ்ட்ரிய- ஹங்கேரிய ஏகாதிபத்தியத்திய இராணுவ சேவையில் இணைவதில் விருப்பம் காட்டாதிருந்திருக்கலாம் என சில வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் எண்ணுகிறார்கள். பல்வேறு இனத்தவர்கள் இருந்த இராணுவத்தில் சேவை செய்ய விரும்பாததால், அவர் கட்டாய இராணுவ சேவையை புறக்கணித்திருப்பார் என அவர்கள் வாதிடுகின்றனர்.

ஹிட்லர் வியானா நகரில் வாழ்ந்துவந்த காலத்தில், இராணுவ சேவையில் இணையாது புறக்கணித்த காரணத்தினால் ஒஸ்ட்ரிய அரசு அவரை தேடிக்கொண்டிருந்த போதும், அவர் அதிகாரிகளிடம் சிக்கவே இல்லை. அவர் 1913 இல் வியானாவிலிருந்து ஜேர்மனியின் மியூனிக் நகருக்குச் சென்ற பின், அவர் இருக்கும் இடத்தை, ஓஸ்ட்ரிய அதிகாரிகள் அறிந்துகொண்டனர். பின் ஓஸ்ட்ரிய அரசு கட்டாய இராணுவ சேவையில் இணைய வேண்டுமென அவருக்கு அறிவித்தது.

ஹிட்லர் மற்றும் ஒஸ்ட்ரிய அரசுக்கிடையில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கடித தொடர்பாடல்கள் தொடர்பான சில தகவல்கள் ஜோஸப் க்ரெனியெர் என்ற எழுத்தாளார் எழுதிய “Das ende des Hitler-Myths” (ஹிட்லர் மாயையின் முடிவு) எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லர், தான் இராணுவ சேவையில் இணையாது தப்பிச்செல்லும் நோக்கில் மியூனிக் நகருக்கு வரவில்லை எனவும், இராணுவ சேவையில் இணைவதற்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார். எனினும் போதிய நிதிவசதியின்மை காரணமாக லின்ஸ் நகருக்கு தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும், ஸ்ட்ராஸ்பேக் நகருக்குச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ட்ராஸ்பேக், ஜேர்மன் அரசின் எல்லைப்பகுதியை அண்மித்த ஒரு ஒஸ்ட்ரிய நகராகும். மியூனிக் இலிருந்து குறைந்த செலவில் அங்கு வரமுடியும் என்பதாலேயே, ஹிட்லர் இத்தகைய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

1914 பெப்ரவரி மாதம் ஹிட்லர் இராணுவ சேவையில் இணைவதற்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார்.அதன் மூலம் அவருக்கு நுரையீரல் தொடர்பான நோயொன்று உள்ளதாகவும், இராணுவத்தில் மட்டுமன்றி உதவி இராணுவப்படையில் கூட இணைத்துக்கொள்ள முடியாதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், 1914 இல் யுத்தம் ஆரம்பித்த போது ஹிட்லர் பெவேரியாவின் மன்னருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்து, பெவேரியா இராணுவத்தில் இணைவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார். அக்காலத்தில் ஜேர்மனிய ஏகாதிபத்திய அரசின் ஒரு பாகமாகவே பெவேரியா இருந்தபோதும், அதற்கென புறம்பானதொரு இராணுவம் இருந்தது. யுத்த காலத்தில் மட்டும் அது ஜேர்மனிய இராணுவத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

ஹிட்லர் ஜேமன் நாட்டவரல்ல என்பதால், அவர் அந்நாட்டு இராணுவத்தில் தவறாக இணைத்துக்கொள்ளப்பட்டார் என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகின்றது. ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத்தின் சிற்றலுவலராக பணியாற்றியதுடன் தகவல்களை கொண்டு செல்லலே, அவரது பிரதான பணியாக இருந்தது. எனினும், அவர் அவரது கடமையை சிறப்பாக செய்தார் என்றும் கூறப்படுகின்றது. அவருக்கு இரண்டு முறை நம்பகத்தன்மைக்கான இரும்புச்சிலுவைவிருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 1914 செப்டம்பரில் இரும்புச்சிலுவைஇரண்டாம் வகுப்பின் விருதும், 1918 ஆகஸ்டில் இரும்புச்சிலுவைமுதலாம் வகுப்பின் விருதும் வழங்கப்பட்டது.

எனினும், ஒஸ்ட்ரிய இராணுவ சேவையில் இணைவதை புறக்கணித்ததற்காக பிற்காலத்தில் ஹிட்லர் மனவேதனைப்பட்டார். எவரேனும் தன்னுடைய இத்தகைய இறந்தகால தகவல்களை தேடிப்பெற்றால், அந்த விடயத்தை தன்னை அகௌரவப்படுத்துவதற்காக பிரயோகப்படுத்தக்கூடும் என அஞ்சினார்.1938 இல் ஜேர்மனி ஒஸ்ட்ரியாவை இணைத்துக்கொண்டவுடன் தனக்கும் ஒஸ்ட்ரிய அரசுக்கும் இடையிலான கடித கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஆவணங்களை தேடும் நோக்கில் எஸ்.எஸ். படைவீர்ர்களில் சிலரை லின்ஸ் நகரின் ஆவணக் காப்பகத்திற்கு அனுப்ப ஹிட்லர் ஏற்பாடு செய்தார். எனினும், அவர்களால் அத்தகைய கடிதங்களை தேடிப்பெற்றுக்கொள்ள முடியாது போனதாகவும், அதனால் ஹிட்லர் மிகவும் கோபமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். படைவீரர்கள் அங்கு செல்வதற்கு முன்னர், லின்ஸில் அரச உத்தியோகத்தர் ஒருவர் அத்தகைய கடிதங்களை அங்கிருந்து நீக்கியதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அந்த கடிதங்களை, உரிய உத்தியோகத்தர் தனக்கு காண்பித்ததாக, ஜோசப் க்ரேனியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிரஜா உரிமையை ஏன் துறந்தார்?

1923 முதல் ஆறு வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டது. (2oceansvibe.com)

யுத்தத்திற்குப் பின்னரும், ஹிட்லர் மியூனிக் நகரில் தொடர்ந்து வாழ்ந்தார். அத்துடன் அந்நாட்டின் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். சிறியதொரு காலப்பகுதிக்குள் ஜேர்மன் தொழிலாளர் கட்சி அவரது தலைமைத்துவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர், அதுவே நாசிச கட்சியாக மாறியது. அது ஆரம்ப காலத்தில் பெவேரியாவில் செயற்பட்ட ஒரு சிறிய கட்சியாகும்.

1923 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் பெவேரிய அரசைக் கவிழ்ப்பதற்கான திட்டமொன்றைத் தீட்டினார். அத்திட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் சிறைவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், 1923 முதல் ஆறு வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டது. இந்த தடையை மீறினால் அவர் மீண்டும் கைதுசெய்யப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. அத்துடன் அவர் ஒஸ்ட்ரிய பிரஜை என்ற வகையில் அவ்வாறு கைது செய்யப்பட்டால், அவர் அந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பும் இருந்தது. அதனை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அவர் தன் எதிர்காலத்தை ஒஸ்ட்ரியாவிலன்றி ஜேர்மனியிலேயே காண விளைந்தார். இந்த அபாய நிலையிலிருந்து மீள்வதற்காக, அவர் 1925 ஏப்ரல் 7ஆம் திகதி ஒஸ்ட்ரிய பிரஜா உரிமையை துறந்தார்.

ஜேர்மன் பிரஜா உரிமையைப் பெறல்

1932 ஆம் ஆண்டு பெப்ரவரியில் அவருக்கு ப்ரான்ஸ்விக்கின் பிரஜா உரிமையும், ஜேர்மனிய பிரஜா உரிமையும் கிடைத்தது.(message.snopes.com)

ஹிட்லர் ஒஸ்ட்ரிய பிரஜா உரிமையை கைவிட்டபோதும், இயல்பாகவே அவருக்கு ஜேர்மனிய பிரஜா உரிமை கிடைக்கவில்லை. அவர் அதற்காக எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவும் இல்லை. அதன்படி அடுத்துவரும் ஏழு வருடங்கள் அவர் நாடற்ற நிலையிலேயே வாழ்ந்துவந்தார். அவருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான தடை முடிவடைந்த பின், அவரால் அரசியல் கூட்டங்களை நடாத்த முடிந்தபோதும் தேர்தல்களில் போட்டியிட முடியவில்லை.

இந்த பிரச்சினை 1932 இல் ஹிட்லரை பாதிக்கக்கூடியதாக இருந்தது. அதே வருடம் ஜேர்மனியில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் நாசிச கட்சி ஒரு பிரபலமான அரசியல் இயக்கமாக இருந்ததனால், அது இத்தேர்தலில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் எண்ணத்துடன் ஹிட்லர் அதில் போட்டியிட்டார்.  எனவே, வேட்பாளர்களை முன்னிறுத்தும் எண்ணம் அவரிடமிருக்கவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் ஜேர்மனின் ஒரு மாநிலமான ப்ரன்ஸ்விக் சுதந்திர அரசின் [Free state of Brunswick]  உள்விவகார அமைச்சராக இருந்த டியற்றின்க் க்ளெகஸ்  ‘Dietricht Klagges’ ஹிட்லருக்கு உதவிபுரிந்தார். 1930 இல் மாநில தேர்தலின் பின் நாசிச கட்சி உள்ளடங்கிய கூட்டு அரசொன்று அந்த மாநிலத்தை ஆட்சிசெய்தது. க்ளெகஸ், ஹிட்லரை ஜேர்மனின் தேசிய அரசியலமைப்பு சபையின் உயர் மந்திரி சபைக்கு, ரைஷ்ராட் ப்ரன்ஸ்விக் சுதந்திர அரசு மூலம் நியமிக்கப்படுகின்ற, அரச பிரதிநிதியாக நியமித்தார். 1932 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நிகழ்ந்த இந்த நியமனத்துடன் அவருக்கு ப்ரான்ஸ்விக்கின் பிரஜா உரிமையும், ஜேர்மனிய பிரஜா உரிமையும் கிடைத்தது.

ஜேர்மன் தேசபக்தியை தனது அரச கருவியாகக்கொண்ட ஹிட்லர் ஜேர்மன் பிரஜையாக வாழ்ந்தது வெறும் 13 வருடங்கள் மட்டுமே. ஹிட்லர் 1945 ஏப்ரல் 30 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படுகின்றது.  

Related Articles