பொருத்தமான ஊழியர் அணியும் தொடக்கநிலை வணிகமும்

எந்தவொரு சிறிய நிறுவனமோ, பெரிய நிறுவனமோ தனது வணிக செயற்பாடுகளை வினைத்திறன் வாய்ந்தவகையில் கொண்டு நடாத்துவதற்கு மிகச்சிறந்த ஊழியர் அணி அல்லது வணிக அணியினை கொண்டிருத்தல் அவசியமாகும்.

பொதுவெளியில் ஊழிய நிரம்பலானது சந்தை கேள்விக்கு மேலதிகமாக உள்ளது. ஆனாலும், ஒவ்வரு வணிக உரிமையாளரும் தனக்கு பொருத்தமான ஊழியர்களை கண்டறிவதிலும், ஒரு வணிக அணியை கட்டியெழுப்புவதிலும் சிக்கல்களை சந்தித்து கொண்டே இருக்கிறார்கள் (nsights.dice.com)

வணிக உரிமையாளர்கள் எத்தகைய திறமையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களினால் வணிகத்தின் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்ளவோ, செயற்படுத்தவோ முடியாது. எனவே, அவற்றினை நிறைவேற்றுவதற்கும், வணிகத்தினை கொண்டு நடாத்தவும் ஊழியர்கள் அவசியமாகின்றனர். பொதுவெளியில் ஊழிய நிரம்பலானது சந்தை கேள்விக்கு மேலதிகமாக உள்ளது. ஆனாலும், ஒவ்வரு வணிக உரிமையாளரும் தனக்கு பொருத்தமான ஊழியர்களை கண்டறிவதிலும், ஒரு வணிக அணியை கட்டியெழுப்புவதிலும் சிக்கல்களை சந்தித்து கொண்டே இருக்கிறார்கள் என்பதனை மறுக்கமுடியாது. இதற்குப் பல்வேறு அக, புறக்காரணிகளின் தாக்கம் உள்ளது. இவற்றை எல்லாம் தாண்டி வணிக உரிமையாளர்கள் அல்லது தொடக்கவணிக உரிமையாளர்கள் எப்படி சிறந்ததும் , பொருத்தமுமான வணிக அணியை கட்டியெழுப்ப முடியும்?

முதல் ஊழியரை எப்போது தேர்வு செய்வது ?  

முதல் ஊழியர் தேர்வு ஏன் முக்கியம் என தெளிவுபடுத்த உதாரணமொன்றை பயன்படுத்தலாம். விமானசேவை ஒன்றில் விமானப்பணிப்பெண்ணாக ஒருவர் பணிபுரிகிறார். அவரது விமானப்பயண ஒழுங்கில் பல்வேறு நாடுகளுக்கு சென்றுவரகூடியதாக அமைவதால், செல்லுகின்ற நாடுகளை பொறுத்து அங்கு பிரபலமான பொருட்களை வாங்கி, தன்னுடைய நாட்டில் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதனால், கொஞ்சம் அவரும், அவரது விற்பனையும் பிரபலமடைய தொடங்கியது.

வேலைப்பளு அதிகரிக்கும்போது, ஒரு ஊழியரை வேலைக்கமர்த்தியிருப்பின் இலாப அளவு குறுகியகாலத்தில் குறைந்திருக்குமே தவிர, தொடர்ச்சியாக வணிகத்தினை எவ்வித பிரச்சனைகளுமின்றி கொண்டு நடாத்தி இருக்கலாம். (cloudfront.net)

முதல் மூன்று மாதங்களில் 50,000/- விற்பனை மூலம் 10,000/- இலாபமும் கிடைக்கிறது. தொழிலை விரிவுபடுத்தவும், மேலதிக வாடிக்கையாளரை இணைக்கவும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கிறார். இணையத்தளம் ஆரம்பித்ததன் பின்பு, இலாபமும் மூன்று மடங்காக உயருகிறது. அதனுடன் சேர்ந்து, விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கின்றனர்.

இந்தநிலையில், வெளிநாடுகளுக்கு பயணப்படும்போது, வணிகத்தையும், வாடிக்கையாளர்களையும் கவனித்துகொள்ள ஒருவரை வேலைக்கு அமர்த்தலாமா? என சிந்திக்கத் தொடங்குகிறார். இருந்தாலும், இலாபத்தில் ஒருதொகையை ஊதியமாக செலுத்தவேண்டும் என்பதனால், அதனை தவிர்த்துவிட்டு, தானே தொடர்ந்து வணிகத்தை நடாத்தி செல்கிறார். சிலகாலங்களில் இலாபம் அதிரித்தாலும், மேலதிகமாக இந்த வணிகத்தை தனியே கொண்டு நடாத்துவதாலும், குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல், சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, பன்மடங்கு இலாபத்தை விட, குடும்பமே முக்கியம் என வணிகத்தை மூடிவிடும் முடிவை எடுக்கிறார்.

உண்மையில், பன்மடங்கு பல்கிப்பெருக வேண்டிய வணிகத்தினை, எடுத்த ஒரு தவறான முடிவால், குறித்த விமான பணிப்பெண் இழக்க நேரிடுகிறது. அதுபோலதான் பல தொடக்கநிலை வணிகங்களுக்கும் நடக்கிறது. இலாபம் உழைக்கும் ஆரம்பகாலத்தில், அந்த இலாபத்தை முதலீடாக கொண்டு எவ்வாறு வணிகத்தினை பல்கிப்பெருக்க வேண்டும் என செயலாற்ற வேண்டும். அதாவது, வேலைப்பளு அதிகரிக்கும்போது, ஒரு ஊழியரை வேலைக்கமர்த்தியிருப்பின் இலாப அளவு குறுகியகாலத்தில் குறைந்திருக்குமே தவிர, தொடர்ச்சியாக வணிகத்தினை எவ்வித பிரச்சனைகளுமின்றி கொண்டு நடாத்தி இருக்கலாம். அது இலாபம் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோலதான் வணிக முயற்சியாளர்களும் எந்தநிலையில் ஊழியர்களை தேர்வுசெய்யவேண்டுமோ அந்த சந்தர்ப்பத்தை தவறவிட கூடாது.

ஊழியர்களை வேலைக்கமர்த்தல்

சிலவேலைகளுக்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அவசியம். சில வேலைகளுக்கு ஆரம்பத்தில் சிறிய வணிகமாக இருப்பதால், அனுபவம் குறைந்தவர்களை வேலைக்மர்த்தினால் போதுமானதாக இருக்கும். (financebazaar.com)

தொடக்கநிலை வணிகங்களை பொறுத்தவரை, வணிகங்களின் ஆரம்பநிலை என்பது கத்திமேலே நடப்பது போன்றதாகும். உரிமையாளர்கள் வணிகத்தினை ஆரம்பம் முதல் கட்டியெழுப்பவென அயராது உழைக்கவேண்டியதாக இருக்கும். இதன்போது, உரிமையாளர்கள் தனியே சகலவேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யாமல், அதனை பகிர்ந்தளிக்கவும் வேண்டும். அதற்கென, பொருத்தமான ஊழியர்களை பொருத்தமான வகையில் தேர்வு செய்து வேலைக்கமர்த்துதல் அவசியமாகும்.

சிலவேலைகளுக்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அவசியம். சில வேலைகளுக்கு ஆரம்பத்தில் சிறிய வணிகமாக இருப்பதால், அனுபவம் குறைந்தவர்களை வேலைக்மர்த்தினால் போதுமானதாக இருக்கும். எனவே, வேலைப்பளுவுக்கு ஏற்ப, ஊழியர்களை வேலைக்கமர்த்துவது அவசியமாகும். மாறாக, தகுதி கூடியவர்களை அல்லது குறைந்தவர்களை தேர்வு செய்தபின்பு, அவர்களை தொழில்ரீதியாக திருப்திபடுத்த முடியாமல் போகலாம். இது ஊழியர்கள் வணிகத்தை விட்டுப்பிரிய காரணமாக அமையக்கூடும். இதுவும் வெற்றிகரமான வணிக அணியினை கட்டியமைக்க முடியாமல் போவதற்கான காரணமாகும்.

ஊழியரை தேர்வு செய்யும் முறை

ஊழியர் தேர்வில் தொடக்க வணிகங்களின் முதன்மை தெரிவாக உள்ள முறை “பரிந்துரை”தான். நண்பர்கள், அனுபவஸ்தர்கள் மூலமாக பரிந்துரைக்கப்படும் நபர்களை நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுப்பதே பரவலாக பயன்படுத்தபடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று, புதிய வணிகங்கள் தொடர்பில் ஊழிய படையினர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ளமையும், அத்தகைய வணிகங்களில் உள்ள ஆபத்தின்(Risk) தன்மையும் ஆகும். ஆயினும், இதனை தவிர்த்து இன்றைய நிலையில், நேரடியாக விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது LinkedIn போன்ற சமூகவலைப்பின்னல்கள் மூலமாகவும் ஊழியர்களை கண்டறியக் கூடியதாக உள்ளது.

எத்தகைய வழிமுறைகள் மூலமாகவும் ஊழியர்களை கண்டறிந்தாலும், இறுதியாக நேரடி நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டே ஊழியர்கள் இறுதி செய்யப்படுகிறார்கள். பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்களின் ஊழியர் நேர்காணலின்போது கேட்கப்படுகின்ற கேள்விகள் பொதுவானவையாகவும், சாதாரணமாகவும் உள்ளன. ஆனால், அதற்கு ஊழியர்கள் வழங்கும் பதில் அவர்கள் குறித்த தொழில் தொடர்பில் எத்தனை அக்கறையாக (passionate) உள்ளனர் என்பதனை எடுத்து காட்டும்.

நண்பர்கள், அனுபவஸ்தர்கள் மூலமாக பரிந்துரைக்கப்படும் நபர்களை நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுப்பதே பரவலாக பயன்படுத்தபடுகிறது. (businessinsider.com)

உதாரணமாக, நேர்காணலில் நீங்கள் எதுதொடர்பில் ஆர்வமாக அல்லது அக்கறையாக இருப்பீர்கள் என கேள்வி கேட்கப்படும். இது ஒரு பொதுவான கேள்விதான். ஆனால், அதற்கான பதிலே ஒருவரை ஊழியராக தேர்வு செய்ய வேண்டுமா ? இல்லையா ? என்பதனை காட்டி கொடுத்துவிடும். காரணம், ஊழியர்கள் தாங்கள் ஆர்வமுடைய விடயத்தை கொண்டு அதன்மூலமாக ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடிய நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது ஒரு அணியாக இணைந்து செயற்படுவதில் சிக்கல்தன்மையை ஏற்படுத்தும்.

எனவேதான், பெரும்பாலான வெற்றிபெற்ற வணிகங்களில் மிக ஆர்வமுடைய ஊழியர்குழுவை தமது தொழிற்துறைக்கு தேர்வு செய்கின்றன. காரணம், இவர்கள்தான் தாம் செய்யும் தொழிலில் முழு ஆர்வமாக மாற்றங்களை கொண்டுவர செயல்படுபவர்களாக இருப்பார்கள். இதுவே, பல வணிகங்களுக்கு பலமாகவும் அமைகிறது.

பொருத்தமானவர்களை தேர்வு செய்வதுபோல, பொருத்தமற்றவர்களை நீக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தன்னை பார்க்கிலும் குறைந்தவர்களாக இருந்தாலும் சரி, அனுபவம் முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தருகின்ற ஆலோசனையும், கருத்துகளும் வணிகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமேயானால் அவர்களை வணிகத்துக்கு துணையாக வைத்துகொள்ள தயங்கவே கூடாது. (mshcdn.com)

பொருத்தமான ஆர்வமுடைய ஊழியர்களை (Passinoated Employees) கொண்டு வணிகத்தின் இலக்கை அடைவதில் உரிமையாளர்கள் எப்படி உறுதியாக உள்ளார்களோ, அதுபோல குறித்த தொழிலுக்கு தேர்வு செய்த ஊழியரினால் பொருத்தமான வெளியீட்டை வழங்க முடியாதவிடத்து, அவர்களை நீக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

குறித்த வேலைக்கு தேர்வு செய்த ஊழியரினால், பொருத்தமான வெளியீட்டை வழங்கமுடியாதவுடனே அவர்களை நீக்குவது என்பது இதன் அர்த்தமல்ல. குறித்த ஊழியரின் வெளியீட்டுக்கான பின்னூட்டங்களை வழங்கி, அதற்கான எதிர்வினைகளையும், முன்னேற்றங்களையும் அவதானித்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். காரணம், பொருத்தமான வெளியீடுகளை தரமுடியாத ஊழியர் மீது அதிக முதலீடுகளை செய்வதோ, அதிக நம்பிக்கை வைப்பதோ இறுதியில் வணிகத்திற்கே பாதகமாக முடியும்.

இவற்றுக்கு எல்லாம் மேலதிகமாக வணிகத்தின் வெற்றிகரமான வணிக அணியினை கட்டியெழுப்புவதிலும், வணிகத்தினை வெற்றிநிலைக்கு உயர்த்துவதிலும் உரிமையாளர்களுக்கு நான்தான் முதலாளி என்கிற அகங்காரம் கூடவே கூடாது. தன்னை பார்க்கிலும் குறைந்தவர்களாக இருந்தாலும் சரி, அனுபவம் முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தருகின்ற ஆலோசனையும், கருத்துகளும் வணிகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமேயானால் அவர்களை வணிகத்துக்கு துணையாக வைத்துகொள்ள தயங்கவே கூடாது.

அதுபோல, உரிமையாளர்கள் செய்யும் மற்றுமொரு மிகப்பெரும் தவறுகளில் ஒன்று, மிக சிறந்த ஆர்வம் கொண்ட திறமையான ஊழியர்களையும் சரி, புதியவர்களையும் சரி மலிவான விலையில் வணிகத்திற்குள் கொண்டுவர எத்தனிப்பதே! எப்போதும், மிகச்சிறந்த வணிக அணியை வெற்றிகரமாக கட்டியெழுப்பவும், வணிகத்தை வெற்றிகரமாக கொண்டு நடாத்தவும் அதற்கான விலையை சரியாக கொடுக்க தயாராகவே இருக்கவேண்டும். இல்லையெனில், அது வணிகத்தினை வேறுவகையில் பாதிப்படைய செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

Related Articles

Exit mobile version