ஆசியாவின் மிகப்பெரிய பூச்சந்தை

இந்தியாவும், இந்தியர்களும் பூக்களுக்கான தேசம், பூக்களை கொண்டாடுகிற மனிதர்கள் எனலாம். அப்படிப்பட்ட இந்திய மண்ணில் மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் ஆசியாவின் மிகப்பெரிய பூக்களிற்கான சந்தை அமைந்திருக்கிறது.

கல்கத்தா நகரின் கம்பீரமான ஹவுரா பாலத்திற்கு கீழே, இரம்மியமான ஹூக்ளி ஆறு ஓடிக்கொண்டிருக்க, அதன் அருகில் இயங்குகிறது இந்தியாவின் மிகப்பெரிய பூச்சந்தை. மாலிக்காட் எனும் இடத்தில் 1855ம் ஆண்டு ராம் மோகன் மாலிக் என்பவரால் அமைக்கப்பட்ட இச்சந்தை 134  வருடங்கடங்களாக இயங்கி வருகின்றது. இது மாலிக் காட் பூச்சந்தை என்று அழைக்கப்படுகிறது. 

அதிகாலை நான்கு மணியளவில் ஆரம்பிக்கிர  பூச்சந்தை, அதை சார்ந்த மக்களின் வாழ்க்கை முறை என்பது மிக பிரமாண்டமானது. மேற்கு வங்கத்தினை சுற்றி பல ஏக்கர் கணக்குகளில் பூந்தோட்டங்களை பயிரிடுகிற நிலவுடைமையாளர்களை காணலாம். வருடம் முழுவதும் எவ்வளவு காலநிலை மாற்றமடைந்தாலும், பஜார்களில் பூக்களிற்கு பஞ்சமே இருக்காது. கண்களை குளிர்ச்சியடைய வைக்கிற அளவு அவ்வளவு வகை வகையான பூக்கள் நிறைந்த இந்த பூச்சந்தை பரபரப்பான அந்த காலை வேளையில் அவ்வளவு அழகாக இயங்கி கொண்டிருப்பதை காணலாம்.

கல்கத்தா நகரில் அமைந்துள்ள ஹவுரா பாலம் புகைப்பட உதவி: www.thrillophilia.com

வங்க மக்களின் பிரதான தொழில்களில் ஒன்று பூக்களை பயிரிடுவது. ஏக்கர் கணக்கில் பயிரிட்ட அந்த பூக்களை வண்டிகளில், இரயில் வண்டியிலென அதிகாலைக்குள்ளாக இந்த பூச்சந்தைக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள். பின்னர் அங்கிருந்து மொத்த லாப விலைக்கு கல்கத்தா நகர் முழுவதும் இருக்கிற பூக்கடைக்காரர்கள், சிறு பூ வியாபாரிகள், கோவில் பொறுப்பாளர்கள், திருமண நிகழ்வுகள் என பல காரணங்களுக்காக தரமான, எல்லா வகையான பூக்களை பெற ஹவுரா பூச்சந்தைக்கு அதிகாலையிலேயே வியாபாரிகள் படையெடுத்து விடுவார்கள்.

பொழுது புலர்கிற போது எல்லா தெருவிலும் உள்ள பூக்கடைகளில் அழகான, பல வர்ண ரோஜா, சாமந்தி, ரஜனிகாந்தா பூக்கள், தாமரை, மல்லிகை, பவளமல்லிகை, செவ்வந்தி என எல்லா பூக்களும் அங்கு நிறைந்து காணப்படும்.

புகைப்பட உதவி: www.telegraphindia.com

கல்கத்தா வருடம் முழுவதும் பண்டிகைக்கான நகரம், வருடம் முழுவதும் அங்கு பூஜைகள் நிகழ்ந்த வகையில் இருக்கும். திருமணம், கலியாட்டங்களென பூக்கள் இன்றி வாழ முடியாதவர்கள் வங்காளிகள் என்கிற அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பூக்களால் நிறைந்தது கல்கத்தா. 

வங்கத்தில் பூக்கள் பல ஆயிரம் மக்களின் மிகப்பிரதான வாழ்வாதார தொழிலாக காணப்படுகிறது.  இங்குள்ள பூ அலங்காரம் வட இந்தியர்களின் திருமண நிகழ்வுகளில் பிரதானமானது என்பதாலும், பூக்கள் இலகுவில் வாடாது என்பதாலும் கல்கத்தா தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இந்த பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளிற்கும் பூக்கள், பூ மாலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

மேற்கு வங்கத்தவர்கள் பூக்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை இங்கு நடக்கின்ற ஹோலி பண்டிகையை வைத்து சொல்ல முடியும். ஹோலி பண்டிகை வசந்த காலத்தை வரவேற்க கொண்டாடப்படுகிறது.  கல்கத்தா இந்த காலங்களில் வெறும் பூக்களாக மட்டும்தான் தெரியும். ஏனெனில் வசந்தகாலம் என்பது கல்கத்தாவில் வர்ண பூக்கள் மலர்கிற காலம். பூக்களால் நிறைந்த வீடுகள், தோட்டங்கள், நிலங்கள், பாடசாலைகள், அலுவலகங்களென ஒட்டு மொத்த தேசமும் பூக்கள் பூத்து குழுங்கும். இப்படிப்பட்ட இடத்தில் இவ்வாறான பிரமாண்ட பூச்சந்தை இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். 

மாலிக் காட் பூச்சந்தை வியாபாரிகள் புகைப்பட உதவி: www.thrillophilia.com

பொதுவாகவே கல்கத்தா விழாக்களின் நகரம் என்பார்கள். அந்த நகரம் கலைஞர்களுக்கானதும்கூட. அந்த வகையில் கல்கத்தாவில் உள்ள ஓவியர்கள், போட்டோகிராப்பர்களின் கலைக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக கல்கத்தா பூச்சந்தை காணப்படுகிறது. கல்கத்தா வருகிற சுற்றுலா பயணிகள் ஹவுரா பாலத்தின் கீழ் இயங்கும் ஆசியாவின் மிகப் பெரிய பூச்சந்தையை பார்ப்பதை தவிர விடுவதாயில்லை. 

Related Articles

Exit mobile version