Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை பத்திரிக்கை கலையின் தாயகத்தை நிறுவிய டி.ஆர்.விஜேவர்தன

நாட்டின் சுதந்திரத்தை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து மீட்பதில் தேசாபிமானிகள் தங்கள் பங்களிப்பை போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தியபோது விஜேவர்தன பத்திரிக்கையின் மூலம் மக்களின் மனதில் எழுச்சியை கொண்டுவரலாம் என நம்பினார். இலங்கையின் பத்திரிகைத் துறையின் முன்னோடியாக அன்றும் இன்றும் என்றும் திகழும் டி.ஆர்.விஜேவர்தனவின் கதை இது.

“நாட்டின் தேசிய அடையாளமாக உருவாகிக்கொண்டு வரும் தேசியவாத எழுச்சியின் வீச்சத்தை பத்திரிகைகள் கண்ணாடி போல் பிரதிபலிக்கும்.” 

-டி.ஆர்.விஜேவர்தன

தாயால் வளர்க்கப்பட்ட டி. ஆர். விஜேவர்தன

சேதவத்த மர வியாபாரி, முஹாந்திரம் துடுகலகே டான் பிலிப் விஜேவர்தன மற்றும் ஹெலனா வீரசிங்க ஆகியோரின் மூன்றாவது ஆண் குழந்தையே டான் ரிச்சர்ட் விஜேவர்தன. 1886 ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்தவர். டான் பிலிப் அலெக்சாண்டர், டான் லூயிஸ், டான் சார்லஸ், டான் எட்மண்ட், டான் ஆல்பர்ட் மற்றும் டான் வால்டர், ஹாரியட் மற்றும் ஆக்னஸ் ஹெலன் ஆகியோர் இவரது சகோதர சகோதரிகள் ஆவர்.

கேம்பிரிட்ஜில் பீட்டர்ஹவுஸில் பட்டம் பெற்ற விஜேவர்தன

தனது ஆரம்பக் கல்வியை சேதவத்த பள்ளியில் பெற்ற பிறகு, தனது சகோதரர்களை போலவே புனித தோமஸ் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்துள்ளார். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த விஜேவர்தனவிற்கு லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள பீட்டர்ஹவுஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருக்கிறது.

லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள பீட்டர்ஹவுஸ் பல்கலைக்கழகம்

அங்கு கல்வி கற்கும் போதே தனது அரசியல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டாராம் விஜேவர்தன. மேலும் இந்தியத் தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பெபின் சந்திர பால், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் கோபால் கிருஷ்ணா கோகலே போன்ற பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்ததாக சொல்கிறார். பட்டம் பெற்ற விஜேவர்தன கேம்பிரிட்ஜில் உள்ள Inner Temple இல் வழக்குரைஞராக (Barrister) ஆகியிருக்கிறார். 

1917 இல் ராஜினாமா செய்தார்…

1912 இல் லண்டனில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய விஜேவர்தன இலங்கையின் புதுக்கடை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்து தந்து பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவர் சட்டத்தரணியாக தனது பயிற்சியை தொடரவில்லை. அதற்கு பதிலாக வணிக நடவடிக்கைகளை நோக்கி திரும்பியிருக்கிறார். அதுமட்டுமன்றி முதலாம் உலகப் போரின் போது Sri Lanka Light Infantry இல் ( இலங்கை இராணுவத்தின் மிகப் பழமையான காலாட்படை படைப்பிரிவு) துணை தலைமை அதிகாரியாக பணிபுரியத் துவங்கினார். 1917இல் தனது துணை தலைமை அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். 

மலையகத்தில் இருந்து தேர்ந்தெடுத்த துணைவியார்…

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உயர்குல குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு மலையத்தில் பெண் பார்த்து திருமணம் நடத்திவைக்கும் கலாசாரம் காணப்பட்டதாம். அதன்படி திருமண வயதை அடைந்த விஜேவர்தனவிற்கும் பெண் பார்க்க ஆரம்பித்து, சப்ரகமுவ மும்மண்டலங்களையும் கவனித்து வந்த மாவட்ட அதிகாரி ஜான் ஹென்றியின் இரண்டாவது மகளை நிச்சயம் செய்தனர்.

நிச்சயித்தபடி ரூபி அலிஸ் கேர்ட்ரூட் மற்றும் விஜேவர்தனவின் திருமணம் 1916 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அவர்களின் பாரம்பரியத்திற்கமைய நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர். சீவிலி விஜேவர்தன, நளினி விஜேவர்தன, ராணி விஜேவர்தன, குசுமா விஜேவர்தன மாறும் ரஞ்சித் சுஜீவா விஜேவர்தன ஆவர்.

தினமின பத்திரிக்கையை சொந்தமாக வாங்கினார்..

டி.ஆர்.விஜேவர்தன அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கைகள்

விஜேவர்தன இலங்கையில் பணிபுரிந்த காலகட்டத்தில் ஆங்கிலப் பத்திரிக்கைகளின் இராச்சியமே காணப்பட்டது. சிங்களம் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாட்டில் அவர்களுக்கான ஒரு பத்திரிக்கை இல்லையே என வருந்தியிருக்கிறார். அதனைப் பற்றி தேடி பார்க்கும் போது சரசவி சந்தரெச என்ற ஒரு சிங்கள மொழி பத்திரிக்கை இருப்பதையும் அப்பத்திரிகை முக்கிய சில பிரதேசங்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துகொண்டார். இந்தக் குறைபாட்டை சமாளிக்க 1909 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘தினமின’ தினசரி பத்திரிக்கையை 1914 இல் சொந்தமாக வாங்கி அதனை அவரே விநியோகிக்கத் திட்டமிட்டார். 

‘டெய்லி நியூஸ்’ என்ற பெயர் மாற்றம்….

1918 ஆம் ஆண்டில் ‘Ceylonese’ என்ற ஆங்கில பத்திரிக்கையை வாங்கி அதனை ‘டெய்லிநியூஸ்’ என்று பெயர் மாற்றி நாட்டின் மிகவும் பிரபலமான ஆங்கில செய்தித்தாளாக உருவாக்கினார். 1923 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான ‘அப்சர்வர்’ observer பத்திரிக்கையை வாங்குவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது.

லேக் ஹவுஸ் எனும் அஸ்திவாரம்…

1926 ஆம் ஆண்டி லேக் ஹவுஸின் தோற்றம் மற்றும் டி.ஆர்.விஜேவர்தன

தினமின மற்றும் டெய்லிநியூஸ் நிறுவனங்கள் இரண்டுமே வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தன. இவற்றின் விளம்பர மற்றும் நிறுவனத்துறைகளை ஒரே இடத்தில் அமைத்தால் தனது வணிகத்திற்கு மிகவும் இலாபகரமானது என்று விஜேவர்தன கண்டறிந்தார். அதன்படி அவர் கொழும்பு கோட்டையில் உள்ள பெய்ரா ஏரியை ஒட்டியுள்ள ஒரு அழகான நிலத்தில் லேக் ஹவுஸை நிர்மாணிக்க ஆரம்பித்தார். 1926 ஆம் ஆண்டு முதல் முதன்மையான பத்திரிக்கை நிறுவனமாக லேக் ஹவுஸ் தனது தொழிலை ஆரம்பித்தது. 

லேக் ஹவுஸை இலங்கையின் மிகப்பெரிய பதிப்பகமாக மாற்றினார்..

லேக் ஹவுஸை நிறுவிய பின்னர், மார்ச் 30, 1930 அன்று, இலங்கையில் மிகவும் பிரபலமான வாராந்திர ஞாயிறு சிங்கள செய்தித்தாளாக சிலுமினவைத் தொடங்கினார். சிலுமின பத்திரிக்கை இலங்கை பத்திரிக்கைத் துறையின் தங்கக் கிரீடமாக மாறியது.

லேக் ஹவுஸின் உள் அமைந்துள்ள நூலகம்

1932 ஆம் ஆண்டில், அவர் தினகரன் பத்திரிக்கையையும் பின்னர் பல வாராந்திர பத்திரிக்கைகளையும் தொடங்கினார், லேக் ஹவுஸை இலங்கையின் மிகப்பெரிய பதிப்பகமாக மாற்றினார்.

டி.ஆர்.விஜேவர்தன அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல்தலை

 

லேக் ஹவுஸை இலங்கையின் மிகப்பெரிய பதிப்பகமாக மாற்றினார்  டி.ஆர்.விஜேவர்தன

இன்றும் தன் கடமையை புரிந்த படி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

டி.ஆர்.விஜேவர்தன அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள்

  • இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் 10வது பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இவரின் பேரன் ஆவார்.
  • இவரது மைத்துனர் சேர்.பிரான்சிஸ் மொலமுரே, மாநில கவுன்சிலின் முதல் பேச்சாளர் ஆவார்.
  • இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன சேர்.பிரான்சிஸ் மொலமுரேவின் மகனும் விஜேவர்தனவின் மருமகனுமானவார்.
  • ‘சிலோனிஸ்’ என்ற பத்திரிக்கையை சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்களிடம் இருந்து வாங்குவதற்கு ரூ .16,000 செலுத்தியுள்ளார்.
  • விஜேவர்தன அவர்கள் வாங்கிய ‘அப்செர்வர்’ பத்திரிக்கை 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • 1930 ஆம் ஆண்டில் ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய செய்தித்தாள்களில் ஒன்றான “சிலுமினா” தொடங்கப்பட்டது.

Related Articles