உலக இலக்கிய தொடர் – பாகம் 2 தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் – முற்குறிப்பு.

முன்னைய கட்டுரையில் டால்ஸ்டாயின் அன்னே கரீனினா பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தேன். டால்ஸ்டாய் மனிதத்தின் வெளிச்சத்தின் பகுதிகளை புனைகிறார் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி மனிதத்தின் இருண்மையை புனைகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துலகம் வித்தியாசமானது. அதுவரை – இன்னமும் யாராலும் கொண்டுசென்று காட்டமுடியாத ஒரு உலகு. ஒரு ஆழ்ந்த இருண்மையான அதல பாதாளத்தில் கைகளில் விளக்குடன் எம்மை கூட்டிச் செல்கிறார். அவருக்கு மட்டுமே தெரிந்த பாதை அது. அவருக்கு அந்த பாதைகள் அத்துப்படி. அத்தனை இருட்டையும் மெது மெதுவாக விலக்கிக்கொண்டு – ஒரு வழிகாட்டி தான் அடைந்த புதையல்களை மற்றவர்களுக்கு காட்டுவது போல – பாதாளத்தின் ஒவ்வொரு மூலைகளையும் சொல்லிக்கொண்டு போகின்றார். நாம் பாதாளத்தின் முடிவு இதுதான் என்று வியந்து பார்க்கின்ற தருணம் அதனிலிருந்து இன்னொரு ஆழமான பாதாளத்திற்கு கூட்டிக்செல்கின்றார்.

“ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கி – வரலாறு

ரஷ்ய – பிரான்சிய மோகம்.

1850 களில் ரஷ்சியா மாய வலையில் சிக்கியிருந்தது. அது பண்பாட்டு மாயவலை. எப்படி இன்றைய இலங்கையும் தமிழர்களும் ஐரோப்பிய கலாசாரதின் மீதும் ஆங்கில மொழி மீதும் மோகம் கொண்டிருக்கிறார்களோ, அப்படியான ஒரு மாய மோகம். பிரான்சின் கலாசாரம் மீதும் பிரான்சிய மொழி மீதும் ரஷ்சியர்கள் அளவு கடந்த மோகத்தை கொண்டிருந்தனர். மேல்வர்க்க குடியினர் முழுக்க முழுக்க பிரான்சிய கலாசாரத்தில் மூழ்கிப்போயினர். அவர்களின் வீடுகளிலும் ஒன்றுகூடல்களிலும் பிரான்சிய காலாசாரம் மேலோங்கி காணப்பட்டது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாடுவதை அவர்களினது வளர்ச்சியின் வெளிப்பாடாக கருதினார்கள்.

இலக்கியங்களிலும் இந்த தாக்கம் வெகுவாக இருந்தது. அன்றைய கால இலக்கிய சிருஷ்டிகளின் முழு போக்கும் பிரான்சிய பின்னணியை மையப்படுத்தியது. அவர்களுக்கு வர்த்தக ரீதியில் வருமானத்தை தரக்கூடியதாகவும் இருந்தது. இவான் துர்கனேவ் ரஷிய இலக்கியத்தில் மிளிர்ந்துகொண்டிருந்தார். அவரின் எல்லாப் படைப்புகளும் பிரான்சிய சாயலுடனேயே வெளிவந்தது. அவரின் மேன்னாட்டு கருத்தியலை மறு பேச்சின்றி ஆமோதிக்க கற்றறிந்த சமூகமும் தயாராக இருந்தது. ஒரு பிரபல  இலக்கிய முன்னோடியின் வழி எதுவோ , அதை லாவகாம பற்றிக்கொண்டு செல்லுகின்ற இன்றைய சமூகத்தைப் போலவே – ரஷ்ய எழுத்தாளர்களும் துர்கனேவை உதாரணமாக கொண்டு பிரான்சிய பின்னணியில் எழுத தொடங்கினார்கள். அக்காலத்தில் வெளியாகிய ராச்சிய இலக்கியங்கள் எல்லாம் பிரான்சிய  போலிகளாகவே இருந்தன.

சிந்தனை ஓட்டத்தில் வார்த்தைகள் அவரைக் கைவிடும் பொழுது தனது எண்ணங்களை கையெழுத்துக் கிறுக்கல்களாக பதிவு செய்துகொள்வார் (tumblr.com)

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்ப பின்னணி

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்பம் கடவுளால் சபிக்கப்பட்ட குடும்பம் என்கிறார், சுந்தர ராமசாமி. உண்மையும் அதுதான். பிரான்சிய பண்பாட்டு இலக்கியங்கள் குவிந்து கொண்டு இருக்கையில், அதன் மீளமுடியாத மோகத்தில் சிக்குண்டு இருக்கையில் – எது தஸ்தாயெவ்ஸ்கியை பிரித்துகாட்டுகின்றது என்று பார்த்தால் அவரின் வாழ்க்கை இன்னல்களே.

தஸ்தாயெவ்ஸ்கி என்ற ஆளுமையின் நிறைவில் இருக்கின்ற மகா ஷக்தி – வாழ்க்கை அவனுக்கு கொடுத்த வடுக்கள்.

1821 இல் மாஸ்கோவில் தஸ்தாயெவ்ஸ்கி பிறந்தான். அவனது தந்தை வைத்தியர். ஆரம்பத்தில் வசதியாக இருந்தவர்கள் தந்தையின் மூர்க்க குணத்தால் காலம் செல்ல வறுமைப்படுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப வாழ்க்கை அனுபவம் அவன் குடியிருந்த வைத்திய குடியிருப்பிலேயே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இறப்பு, நோய், அலைச்சல் என்பவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்து வருகின்றான். தனது பதினான்காவது  வயதிலேயே தாயையும், தொடர்ந்து இரண்டாம் வருடம் தந்தையையும் இழந்து அண்ணனுடன் வாழ்கின்றான்.

தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதை அவரின் கொடூரம் தாங்க முடியாத வேலையாட்களே செய்ததாகவும் குறிப்பிருக்கிறது. அண்ணன் மைகேல் மீது மிகுந்த பாசம் உடையவானாக இருக்கிறான் தஸ்தாயெவ்ஸ்கி. இருவரும் இராணுவ பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கற்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி கற்கை நெறிகளில் சிறந்து விளங்குகின்றார். இருந்தும் இறுதி பரீட்சையில் சூழ்ச்சிகளால் பின்தள்ளப்படுகின்றார். அண்ணன் தேர்வாகி இருந்தாலும் உடல்நிலை குறைவால் தொடர்து இயங்க முடியாமல் போகிறது. இதுவெல்லாம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வருத்தத்தை அளிக்கின்றது.

தஸ்தாயெவ்ஸ்கியும் இலக்கியமும்.

இராணுவ பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே தஸ்தாயெவ்ஸ்கிக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ரஷ்ய இலக்கியங்கள், ஜெர்மானிய இலக்கியங்கள், கொலை வழக்குகள், சிற்றிதழ்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி ஒரு தீராத வாசகானவே இருந்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது.(listal.com)

தனது இருபத்தைந்தாம் வயதில் முதலாவது நாவலான “ஏழை எளியவர்” (Poor People) ஐ எழுதுகின்றார். தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது. தனது சமூக நிலை பற்றி வருந்திய தஸ்தாயெவ்ஸ்கி முதலாவது நாவலை பதிப்பிட பின்நிற்கிறார். பின்வந்த காலப்பகுதியில் ரஷ்யாவின் மதிப்பு மிகுந்த சிற்றிதழ் ஒன்றுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நண்பன் “ஏழை எளியவர்கள்” நாவலை கொடுக்க, அதற்கு மிக சிறந்த விமர்சனமும் பெறப்படுகிறது.

தஸ்தாயெவ்ஸ்கி அன்று பரவியிருந்த இயக்கங்களிலும் தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார். அந்த சமயம் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் அவருக்கு விதிக்கபடுகிறது. நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை ரத்து செய்யப்பட மீண்டும்  தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் செல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி தனது  வாழ்கையில் இறப்பிற்க்கான கடைசி நொடி மட்டும் சென்று, இறப்பின் வலி , அதற்கு முன்னரான மனதின் போராட்டம், எண்ண அலைச்சல்கள், வாழ்க்கை மீதான துச்சம் என்று மனிதனின் கடைசி நொடியில் உணரும் அனைத்து மனச் சிக்கல்களையும் அனுபவித்து விடுகின்றார். அதன் பின்னரான கைதி வாழ்கையும் அவருக்கு இலகுவானதாக அமைந்து விடவில்லை. (கைதி வாழ்க்கை எப்போதும் இலகுவானது அல்லவே!) தனது வாழ்வின் இருண்ட நாட்களை விதம் விதமான சிறைக்கைதிகளுடன் கழிக்கின்றார். ஒரு வகையில் அனைத்தையும் உணர்ந்த தேவ நிலையிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி – சக கைதிகளின் மன ஆறுதலுக்கும் தன்னாலான உதவிகளையும் ஆற்றுகின்றார்.

1854 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றார். ஏழை எளியவர் மூலம் அறிமுகமாயிருந்த தஸ்தாயெவ்ஸ்கியை ரஷ்ய சமூகம் மறந்துபோயிருந்தது.  வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. இறுதியில் அண்ணனுடன் சேர்ந்து காலம் என்ற இதழை தொடங்குகிறார். மிக குறுகிய காலத்தில் காலம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது.

வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. (radissonblu.com)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய நாளில் சாதாரணமாக எந்த சிற்றிதழ்களும் கணக்கிலேயே எடுக்கப்படுவதில்லை. அத்தோடு எதையும் அரசாங்கம் நிறுத்தியதாய் அறியவும் இல்லை. இது அரசாங்கத்தின் அறிவீனமா? அல்லது சிற்றிதழ்களின் மந்த நிலையா? மீண்டும் ‘யுகம்’ என்ற இதழை தஸ்தாயெவ்ஸ்கி தொடங்குகிறார். இதழ் சோர்வாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கையிருப்பு காலியாகி கடனும் ஏறிக்கொண்டிருந்த பொழுது தஸ்தாயெவ்ஸ்கியை விட்டு அவரின் அண்ணன் இறந்து போகிறான். கூடவே தஸ்தாயெவ்ஸ்கிக்கு சூதாட்டமும் பழகி வெறியாகிப்போகிறது. தஸ்தாயெவ்ஸ்கி அனைத்தையும் இழந்து வீதிக்கு வருகிறார். மீண்டும் மீண்டும் துன்பம் சூழ்ந்து கொள்கிறது. அப்போது எழுதிய நாவல் தான் ‘குற்றமும் தண்டனையும்’.

எப்போதும் இருக்கிற ரஷ்ய எழுத்தாளர்களைப்போல இவரும் அங்கொன்று இங்கொன்றாய் திருமணம் செய்கிறார். குற்றமும் தண்டனையும் எழுதுவதற்கு ஒரு காரிய தரிசியை ஒழுங்கு செய்கிறார் – அவள் பெயர் அன்னா. இறுதியில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்கையில் நடந்த பெரும் திருப்பங்களுக்கும் அவரின் எழுத்துகளின் ஒன்றினைப்புக்கும் அன்னா ஒரு மனைவியாக உதவுகிறாள். இக்காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கி “ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). கரமசோவ் சகோதரர்கள் மூலம் புகழின் உச்சத்தையே அடைகிறார்.

தொடரும்…

Related Articles

Exit mobile version